கனரக வாகனங்கள் வாலாஜாபாத் ரவுண்டானா வழியாக செல்ல தடை - கலெக்டர் தகவல்

கனரக வாகனங்கள் வாலாஜாபாத் ரவுண்டானா வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் பகுதிகளில் இயங்கி வரும் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களிலிருந்து வாலாஜாபாத் வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளால் வாலாஜாபாத் ரவுண்டானா அருகே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ளது.
ஆதலால் வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வாலாஜாபாத் ரவுண்டானா வழியாக செல்வதற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய நேரங்களில் கனரக வாகனங்கள் பழையசீவரம், பாலூர், எழிச்சூர், ஒரகடம் வழியாக சென்னை மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லலாம். மேற்படி நேரங்களில் கிரஷர் மற்றும் குவாரிகளுக்கு செல்லும் வாகனங்களும் இதே வழியை பயன்படுத்த வேண்டும். மாகரல், உத்திரமேரூர் பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ஓரிக்கை ஜங்ஷன் - செவிலிமேடு ஜங்ஷன், பாலாறு ஜங்ஷன், கீழம்பி வழியாக ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சென்னை செல்ல வேண்டும்.
வந்தவாசி, செய்யார் பகுதிகளிலிருந்து வரும் கனரக வாகனங்கள் செவிலிமேடு பாலாறு ஜங்ஷன், கீழம்பி வழியாக ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சென்னை செல்ல வேண்டும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






