“ஒருநாள் தாமதித்து இருந்தாலும் நானும் உக்ரைனில் சிக்கி இருப்பேன்”-கடைசி விமானத்தில் வந்த மதுரை மருத்துவ மாணவி பேட்டி

ஒருநாள் தாமதித்து இருந்தாலும் நானும் உக்ரைனில் சிக்கி இருப்பேன் என்று கடைசி விமானத்தில் வந்த மதுரை மருத்துவ மாணவி உருக்கத்துடன் கூறினார்.
மதுரை,
ஒருநாள் தாமதித்து இருந்தாலும் நானும் உக்ரைனில் சிக்கி இருப்பேன் என்று கடைசி விமானத்தில் வந்த மதுரை மருத்துவ மாணவி உருக்கத்துடன் கூறினார்.
போர் தாக்குதல்
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருவதால், நாடே நிலை குலைந்து இருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே, அங்கு தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், உக்ரைனில் மருத்துவம் படிக்கும் மதுரை மாணவி ரேச்சல் பொன் ஏஞ்சல் (வயது 23) விமானம் மூலம் மதுரை வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த நான், உக்ரைன் கார்கிவ் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை படித்து வருகிறேன். 3-ம் ஆண்டு மற்றும் 6-ம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேர்வுக்காக நான் உள்பட அனைத்து மாணவர்களும் காத்திருந்தோம்.
இதற்கிடையே, ரஷியா-உக்ரைன் மீது போர் தாக்குதல் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதற்கான ஏற்பாடுகளையும் ரஷியா செய்திருந்ததை எங்களால் உணர முடிந்தது. அப்போது, உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அறிவிப்பு வெளியானது. அதில், படிப்பு மற்றும் வேலைக்காக வந்திருந்த இந்தியர்களை உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சிறப்பு விமானங்களை அரசு இயக்குவதாகவும், அதில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறியது. அந்த விமானத்தில் அதிக அளவு கட்டணம் விதிக்கப்பட்டிருந்தது.
குண்டு வெடிக்கும் சத்தம்
நானும் ஓசூரை சேர்ந்த மாணவியும் அந்த விமானத்தில் 23-ந்தேதி மதியம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். அதன்படி, நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்த 'கியிவ்' விமான நிலையம் வருவதற்கு 6 மணி நேரம் பஸ்சில் பயணித்தோம். நாங்கள் கிளம்பியபோது அமைதியான சூழ்நிலை இருந்தது. அதன்பின்னர் விமானத்தில் புறப்பட்டு ஷார்ஜா வழியாக சென்னை வந்தோம். ஷார்ஜா விமான நிலையத்தில் 9 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அந்த சமயத்தில், அங்கிருந்த நண்பர்களிடம் பேசுகையில் 24-ந்தேதி காலை 5.30 மணியில் இருந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக பதற்றத்துடன் தெரிவித்தனர். மேலும், நாங்கள் வந்த விமானம் தான் உக்ரைனில் இருந்து தமிழகம் வந்த கடைசி விமானம் எனவும் தெரிவித்தனர்.
இதுபோல், அவர்கள் வெவ்வேறு தேதிகளில் விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், அதற்குள் போர் தாக்குதல் தீவிரமாகி விட்டது. அரசு சார்பில் 3 நாட்கள் இயக்கப்பட்ட விமானங்களில் அதிக கட்டணங்கள் வசூலித்ததால் ஏராளமான மாணவர்களால் தமிழகம் வரமுடியவில்லை. இதுதவிர வேறு நாட்டு விமான நிறுவனங்கள் மூலம் தமிழகம் வருவதற்கு என்னுடைய நண்பர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அந்த விமானங்களையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நானும் சிக்கி இருப்பேன்
இதன் காரணமாக அவர்கள் அங்குள்ள விடுதியின் தரை தளம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலைய கீழ் பகுதி உள்ளிட்ட இடங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கி இருக்கின்றனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவசதியும் இல்லாமல் இருக்கின்றனர். மாணவிகள் பெரிதும் சிரமத்தில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும்.
அந்த சமயத்தில் குறைந்த அளவில் கட்டணம் வசூலித்திருந்தால், ஏராளமானவர்கள் தமிழகம் வந்திருப்பார்கள். வழக்கமாக சென்னையில் இருந்து உக்ரைன் செல்வதற்கு ரூ.28 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் செலவாகும். ஆனால், நான் ரூ.60 ஆயிரம் செலவு செய்து வந்திருக்கிறேன். மேலும், போர் தீவிரமடைவதற்கு முன்பே நான் அங்கிருந்து வந்து விட்டேன். தற்போது அங்கு இயக்கப்படும் விமானங்களில் ரூ.1 லட்சத்திற்கு அதிகமாக விமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக என் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். உக்ரைனில் தவிக்கும் என்னுடைய நண்பர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க வேண்டும். ஒரு நாள் தாமதித்திருந்தாலும் நானும் அவர்களுடன் சிக்கி இருப்பேன். என்னை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story