கீழ்வேளூரில் கார் மீட்பு

நாகூர் அருகே காணாமல் போன கார், கீழ்வேளூரில் மீட்கப்பட்டது.
நாகூர்:
நாகூரை அடுத்த தெற்கு பால்பண்ணைச்சேரியை சேர்ந்தவர் காசிநாதன் மகன் ஸ்ரீதரன். இவர் தனது காரை பழுது பார்க்க, அந்த பகுதியில் உள்ள முருகையன் என்பவரின் மெக்கானிக் கடையில் கடந்த 9-ந்தேதி விட்டுள்ளார். கரை பழுது பார்த்துவிட்டு கடந்த 24-ந்தேதி மெக்கானிக் கடையின் முன்பு காரை நிறுத்தி விட்டு முருகையன் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது காரை காணவில்லை. மேலும் மர்ம நபர்கள் மெக்கானிக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சாவியை எடுத்து காரை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து முருகையன் நாகூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று கீழ்வேளூர் அருகே குருமணங்குடியில் சாலை ஓரத்தில் 2 நாட்களாக ஒரு கார் அனாதையாக நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த கார், தெற்குபால்பண்ணைச்சேரியில் மெக்கானிக் கடை முன்பு நிறுத்தியிருந்த போது காணாமல் போனது என்பது தெரிய வந்தது. உடனே நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாகூர் போலீசார் அங்கு வந்து அந்த காரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.
Related Tags :
Next Story