உணவில் விஷம் கலந்து குழந்தையை கொன்ற கொடூர தாய் கைது


உணவில் விஷம் கலந்து குழந்தையை  கொன்ற கொடூர தாய் கைது
x
தினத்தந்தி 8 April 2022 2:01 AM IST (Updated: 8 April 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்தனர். 
2 குழந்தைகளின் தாய்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சி கோவில் விளையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). கொத்தனாரான இவருடைய மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு 4 வயதில் சஞ்சனா என்ற மகளும், 1½ வயதில் சரண் என்ற மகனும் இருந்தனர். அருகில் உள்ள அங்கன்வாடியில் சஞ்சனா படித்து வந்தார்.
நேற்றுமுன்தினம் காலையில் வழக்கம் போல் ஜெகதீஷ் வேலைக்கு சென்றார். ஆனால் அன்றைய தினம் சஞ்சனாவை அங்கன்வாடிக்கு கார்த்திகா அனுப்பவில்லை. பின்னர் சரணை கொஞ்ச நேரம் பார்த்து கொள்ளும்படி பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுள்ளார். அதன்படி அங்கு விளையாடிய குழந்தை சரணை மீண்டும் உறவினர், தாய் கார்த்திகாவிடம் ஒப்படைத்தார்.   
குழந்தை திடீர் சாவு
இந்தநிலையில் மதியம் மகன் சரணின் உடல்நிலை திடீரென சரியில்லாமல் இருப்பதாகவும், மயக்க நிலைக்கு சென்றதாகவும்  செல்போன் மூலம் கார்த்திகா தனது கணவர் ஜெகதீசுக்கு தெரிவித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த ஜெகதீஷ் வீட்டுக்கு ஓடி வந்து குழந்தை சரணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சரண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனை கேட்டதும் ஜெகதீஷ் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர் சரணின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்தார். இதனை அறிந்ததும் அங்கு அக்கம் பக்கத்தினர் திரண்டு கதறி அழுதனர். நன்றாக விளையாடிய குழந்தை திடீரென இறந்து விட்டதே? என கூறியபடி இருந்தனர். மேலும் குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் பேசிக் கொண்டனர்.
சாவில் சந்தேகம்
மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
அப்போது குழந்தையின் தாயார் கார்த்திகா போலீசாரிடம் கூறுகையில், வீட்டில் இருந்த விஷப்பொடியை தின்பண்டம் என நினைத்து குழந்தை சாப்பிட்டிருக்கலாம், இதனால் குழந்தை இறந்திருக்கலாம் என கதறி அழுதபடி தெரிவித்துள்ளார்.
ஆனால் போலீசாருக்கு குழந்தையின் சாவில் சந்தேகம் இருந்தது. இதனால் ஜெகதீஷ், கார்த்திகாவை மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று துருவி, துருவி விசாரித்தனர்.
திடுக்கிடும் தகவல்
அப்போது கார்த்திகா, குழந்தை சரணுக்கு விஷம் கொடுத்து கொன்றதை ஒப்பு கொண்டார். அதாவது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை தீர்த்து கட்டிய திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். மேலும் இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மார்த்தாண்டம் அருகே மாராயபுரம் பகுதியில் உள்ள ஒரு ஆலய திருவிழாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கார்த்திகா சென்றுள்ளார். அப்போது மாராயபுரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வரும் 25 வயது  வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் உருவானது.
திருமணத்தை மறைத்து கள்ளக்காதல்
அந்த வாலிபரை பார்த்ததும் கார்த்திகாவுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. தான் திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய் என்பதை மறந்து அந்த வாலிபருடன் நெருங்கி பழகியுள்ளார். மேலும் திருமணம் ஆனதை மறைத்து அவருடன் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
தினமும் செல்போன் மூலமாகவும், தனிமையிலும் கள்ளக்காதலை வளர்த்த கார்த்திகாவுக்கு அந்த வாலிபர் துணையின்றி வாழ முடியாது என்ற மனநிலை உருவானது. இந்தநிலையில் தான் கார்த்திகாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும் விவரம் அந்த வாலிபருக்கு தெரியவந்தது.
கொன்று விட்டு நாடகம்
இதனை தொடர்ந்து கார்த்திகாவை விட்டு கொஞ்சம், கொஞ்சமாக அந்த வாலிபர் விலக தொடங்கினர். ஒரு கட்டத்தில் கார்த்திகா, என்னை விட்டு பிரிந்து விடாதே என அந்த வாலிபரிடம் கெஞ்சியுள்ளார். அப்போது 2 குழந்தைகள் இருக்கிற உனக்கு, நான் சரிப்பட்டு வரமாட்டேன் என வாலிபர் தெரிவித்துள்ளார்.
இந்த வார்த்தை தான் கார்த்திகாவை மனதளவில் உலுக்கியுள்ளது. கள்ளக்காதலுக்கு தன்னுடைய 2 குழந்தைகள் தான் இடைஞ்சல் என நினைத்த அவர், குழந்தைகளை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
அதன்படி சரணுக்கு சேமியாவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு ஒன்றுமே தெரியாதது போல் கார்த்திகா நாடகமாடி உள்ளார்.
இவ்வாறு கார்த்திகா தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இதற்கிடையே கார்த்திகா, மற்றொரு குழந்தையான சஞ்சனாவிற்கும் விஷம் கொடுத்தது தெரியவந்தது. அந்த குழந்தை திடீரென மயங்கியதால் அவருக்கு திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகாவை கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொன்றதாக தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 More update

Next Story