தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 April 2022 9:43 PM IST (Updated: 10 April 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி. பொதுமக்கள் குறைகள் பகுதி


 ஆமை வேகத்தில் கால்வாய் கட்டும் பணி

வேலூர் வசந்தபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஒரு சில இடத்தில் பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நிற்கிறது. இதனால் கழிவுநீர் தெருவில் வழிந்தோடி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. துர்நாற்றமும் வீசுகிறது. நடப்பதற்கே சிரமமாக உள்ளது. நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

  -ரவி, வசந்தபுரம்.

பஸ் கட்டண உயர்வை தடுப்பார்களா?

  ஆரணியில் இருந்து வேலூர் வரை தனியார் பஸ்களில் ரூ.30 வசூலித்தனர். ஆனால் தற்போது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ரூ.35 கட்டணமாக வசூல் செய்கின்றனர். இதை, பொதுமக்கள் மற்றும் பயணிகள் கேட்டால் சரியான பதில் கிடைப்பதில்லை. எனவே ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நடவடிக்கை எடுத்து பஸ் கட்டண உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும்.
  -கண்ணதாசம், அக்ராப்பாளையம்.

வீணாக வெளியேறும் குடிநீர்

  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கல்குப்பம்மதுரா அரிமா நகர் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு தரமற்ற நீரேற்றும் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. கல்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளது. தேங்கி கிடக்கும் தண்ணீர் குடிநீருடன் கலப்பதால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?
  -ராமதாஸ், கல்குப்பம்.

போளூருக்குள் பஸ்கள் வருவது இல்லை

  வேலூர் திருவண்ணாமலை திருவண்ணாமலை வேலூருக்கு இயக்கப்படும் அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் பகல் நேரத்தில் இயக்கப்படும்போது, போளூர் செல்லும் பயணிகளை ஏற்றுவதில்லை. திருவண்ணாமலை, வேலூர் செல்லும் பயணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. போளூர் செல்லும் பயணிகள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பயணிகளை பஸ் புறப்படும்போது ஏறுங்கள், எனக் கூறுகிறார்கள். அதேபோல் இரவில் அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் போளூருக்குள் வருவது இல்லை. பைபாஸ் வழியாக சென்று விடுகின்றன. அதில் ஏறும் பயணிகளை பைபாசில் இறக்கி விடுகிறார்கள். இரவில் பைபாசில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே போளூர் பஸ் நிலையத்துக்கு வரும் அவல நிலை ஏற்படுகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அனைத்துப் பஸ்களும் போளூருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ஆட்டோ க.முத்து, சமூக ஆர்வலர் போளூர்.

 மோட்டார்சைக்கிள்களால் பயணிகளுக்கு இடையூறு

  திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் வசதிக்காக பஸ் நிலையத்தில் 2 இடத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நிழற்குடையில் பயணிகள் நிற்கும் இடத்தில் இடையூறாக மோட்டார்சைக்கிள்கள் வரிைசயாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெயில் நேரத்தில் நிழலுக்காக பயணிகள் அங்கு நிற்க போதிய வசதி இல்லாமல் வெயிலில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ராம், திருவண்ணாமலை.

திறந்தே கிடக்கும் குடிநீர் தொட்டி

  வாணாபுரம் அருகே உள்ள சதாகுப்பத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் முன் பகுதியில் தொட்டி ஒன்று உள்ளது. அதில் பாதியளவு தண்ணீர் உள்ளது. கடந்த சில வாரங்களாக தொட்டி திறந்தே இருந்தது. அசம்பாவிதம் நடக்கும் முன் தொட்டியை மூடி பராமரிக்க வேண்டும்.
  -குருமூர்த்தி, சதாகுப்பம்.
  

1 More update

Next Story