நாட்டரசன்கோட்டை பகுதியில் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

நாட்டரசன்கோட்டை பகுதியில் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது
சிவகங்கை,
சிவகங்கை தொல் நடை குழுவைச் சேர்ந்த சரவணன் நாட்டரசன் கோட்டையில் இடிபாடுடைய கோவில் மண்டபம் ஒன்றில் சுவரில் கல்லெழுத்துகள் இருப்பதாக சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அங்கு சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, செயலாளர் நரசிம்மன், உறுப்பினர் சரவணன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவை 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் என்று தெரிந்தது. இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் கொல்லங்குடி காளிராசா கூறியதாவது:- சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டையில் வீரகண்டான் ஊருணி கரையின் கிழக்குப் பகுதியில் இடிந்த நிலையில் உள்ள உடையவர் கோவில் தெற்கு மற்றும் மேற்கு சுவரில் 9 துண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வீர கண்டான் ஊருணிக் கரையில் மேற்குப் பகுதியை விடுத்து மற்ற பகுதிகள் அனைத்தும் கோவில்களால் சூழப்பட்டு உள்ளன. அதில் உடையவர் கோவில் என அழைக்கப்படும் இடம் இடிபாடுடன் கூடிய முகப்பு மண்டபமும் அதை யொட்டிய பின்பகுதியில் கருவறையுடனும் அமைந்துள்ளது. உடையவர் என்பது ராமானுஜரின் 12 திருநாமங்களில் ஒன்றாக அழைக்கப்பெறுகிறது. சிறிதும் பெரிதுமாக 9 துண்டு கல்வெட்டுகளை கருவறை வெளிப்புற சுவரில் காணமுடிகிறது. இதில் ஒரு சில சொற்கள் முழுமையாக உள்ளன. சோணாடு கொண்டருளிய கொண்ட என்ற வரிகள் மூலம் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1216-1238) கல்வெட்டாக இருக்கலாம் என கருத முடிகிறது.
அருகில் உள்ள சூரக்குளத்தில் இருந்து வஸ்தாபட்டிக்கு ஊருணி பின்புறத்தில் இருந்து காட்டு வழியாக செல்லும் பாதை பிரிவில் இருந்து பஞ்சாட்சரம் அய்யனார் கோவிலுக்கு செல்ல முடிகிறது. நல்ல அடர்ந்த காட்டிற்குள் அமைந்துள்ள இக்கோவிலில் நுழைவு வாயில் கீழ்ப்பகுதி சுவரின் கட்டுமானத்தில் ஒரு முழுமை இல்லா துண்டுக் கல்வெட்டு காணப்படுகிறது.இந்த கல்வெட்டில் 13,14-ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் எழுதப்பட்டு உள்ளது.இதுதவிர வீர கண்டான் ஊருணியின் மேற்கு பகுதியில் நீர்வரத்து மதகு அடிப்பகுதியில் இடுப்புக்கு மேல் பகுதி மட்டும் உள்ள சிலை ஒன்று காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story