கிணத்துக்கடவு பகுதியில் தொடர் மழையால் தக்காளி விலை கிடு கிடு உயர்வு


கிணத்துக்கடவு பகுதியில் தொடர் மழையால் தக்காளி விலை கிடு கிடு உயர்வு
x
தினத்தந்தி 15 April 2022 7:54 PM IST (Updated: 15 April 2022 7:54 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு பகுதியில் தொடர் மழையால் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து உள்ளது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் தொடர் மழையால் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து உள்ளது. 

தக்காளி விலை உயர்வு

கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் ஒரு கிலோ தக்காளி கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் அதிகபட்சமாக 7 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆனது. தற்போது கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 
இதனால் தக்காளி வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதன்காரணமாக தற்போது தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ 20 ரூபாய்க்கு ஏலம் போனது. இது கடந்த வார்த்தையை விட ரூ.13 அதிகமாக ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் அதிகரிக்க வாய்ப்பு

திடீரென ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு ஏலம் போனதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி விலை தினசரி காய்கறி சந்தையில் அதிக விலைக்கு ஏலம் போனது. இதனால் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வு குறித்து காய்கறி கமிஷன் கடை உரிமையாளர் கூறியதாவது:- 
கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து குறைந்தளவு தக்காளிகள் தான் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக கிணத்துக்கடவு பகுதிகளில் மழை பெய்து வருவதால், செடிகளில் உள்ள தக்காளிகள் சேதமடைந்துள்ளன. இதனால் குறைந்த அளவில் தக்காளிகள் விற்பனைக்கு வருகிறது. தற்போது தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத அளவில் அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 
1 More update

Next Story