கோவை அருகே தொழில் அதிபர் மகன் உள்பட 2 பேர் காரில் கடத்தல் 4 பேர் கைது


கோவை அருகே தொழில் அதிபர் மகன் உள்பட 2 பேர் காரில் கடத்தல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 April 2022 6:15 PM GMT (Updated: 15 April 2022 6:15 PM GMT)

கோவை அருகே பணத்தை திரும்ப கொடுக்காததால் தொழில் அதிபர் மகன் உள்பட 2 பேரை காரில் கடத்தப்பட்டனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சரவணம்பட்டி

கோவை அருகே பணத்தை திரும்ப கொடுக்காததால் தொழில் அதிபர் மகன் உள்பட 2 பேரை காரில் கடத்தப்பட்டனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

தொழில் அதிபர் 

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹோலிகிராஸ் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷாஸாத் (வயது 38). தொழில் அதிபரான இவர் பெங்களூருவை சேர்ந்த ஹசிம் அகமது (34) என்பவருடன் சேர்ந்து வீட்டு உபயோக பொருள் மற்றும் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். 

இந்த வியாபாரத்தில் இருந்து விலகிய ஹசிம் அகமது, தான் கொடுத்த ரூ.20 லட்சத்தை திரும்ப கொடுக்குமாறு முகமது ஷாஸாத்திடம் ஹசிம் அகமது கேட்டு உள்ளார். 

இதையடுத்து ரூ.6 லட்சத்தை மட்டும் கொடுத்த முகமது ஷாஸாத், மீதமுள்ள பணத்தை பிறகு தருவதாக கூறி உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் மீதமுள்ள பணத்தை கொடுக்குமாறு ஹசிம் அகமது கேட்டு உள்ளார்.

 அதற்கு அவர், கோவையை அடுத்த சூலூரில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு வீட்டு உபயோக பொருட்களை அனுப்பி வைத்து உள்ளேன். அங்கு சென்று பணத்தை வாங்கி கொள்ளுமாறு கூறி உள்ளார். 

பணம் கேட்டார்

இதை தொடர்ந்து கோவை வந்த ஹசிம் அகமது சூலூரில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சென்று ரூ.14 லட்சம் கேட்டபோது அவர்கள் பணம் கொடுக்கவில்லை. உடனே ஹசிம் அகமது, முகமது ஷாஸாத்துக்கு தொடர்பு கொண்டு பணம் கேட்டதற்கு நான் அடுத்த மாதம் கோவை வருவேன், அப்போது பணத்தை தருகிறேன் என்று கூறி உள்ளார். 

இந்த நிலையில் முகமது ஷாஸாத் தனது மகன் முகமது சயீப் (14), மாமா முகமது ஆசிப் (70) ஆகியோருடன் கடந்த 13-ந் தேதி காரில் ஊட்டி சென்றார். இதை அறிந்த ஹசிம் அகமது தனது நண்பர்களான பெங்களூருவை சேர்ந்த சுபையர் அகமது (27), சையது அஷ்ரர் (32), முகமது மொசீன் (25) ஆகியோருடன் கோைவ வந்தார். 

காரில் கடத்தல்

மதியம் 2 மணியளவில் அவர் கோவை அருகே உள்ள கீரணத்தம் அருகே சென்றபோது, ஹசிம் அகமது, முகமது ஷாஸாத்தின் காரை முந்திச் சென்று மறித்து முகமது ஷாஸாத்திடம் பணம் கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதுடன், பணத்தை கொடுக்க முடியாது என்று முகமது ஷாஸாத் கூறியதாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த ஹசிம் அகமது, தனது நண்பர்களுடன் சேர்ந்து, முகமது ஷாஸாத்தின் மகன் முகமது சயீப், அவருடைய மாமா முகமது ஆசிப்பையும் காரோடு கடத்தி சென்றார். இது குறித்த புகாரின்பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 

4 பேர் கைது

இந்த நிலையில் போலீசார் ேகாவை- அத்திப்பாளையம் 4 ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தினார்கள். 

அதில் காரில் வந்தவர்கள் ஹசிம் அகமது மற்றும் அவருடைய நண்பர்கள் என்பதும், அவர்கள் முகமது ஷாஸாத்தின் மகன் மற்றும் மாமாவை கடத்தி செல்வதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் ஹசிம் அகமது மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் முகமது சயீப், மாமா முகமது ஆசிப் ஆகியோரை மீட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


Next Story