தொடர் விடுமுறை மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் - புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்

தொடர் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து ரசிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் உள்நாட்டு பயணிகள் வருகை அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக தமிழ் வருடப்பிறப்பு, புனிதவெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நேற்று காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குடும்பத்துடன் அரசு பஸ்களிலும், சுற்றுலா வாகனங்களிலும் கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கியதால் கடற்கரை கோவில், ஐந்துரதம் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. பார்க்கின்ற இடங்களில் எல்லாம் சுற்றுலா பயணிகள் தலைகளே தென்பட்டன.
கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியும் பலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்ததை காண முடிந்தது. மேலும் கடற்கரையில் பாறைகள் உள்ள ஆபத்தான பகுதிகளில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் போலீசார் அவ்வப்போது அறிவுறுத்தி கொண்டே இருந்தனர். குறிப்பாக தங்கள் பெற்றோர்களுடன் தொடர் விடுமுறையை கழிக்க வந்த சிறுவர், சிறுமிகளும் கடலில் மகிழ்ச்சியுடன் குளித்ததையும் காண முடிந்தது.
கடற்கரையில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் ஏராளமான போலீசார் சாதாரண உடையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.
Related Tags :
Next Story






