அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவியிடம் போலீசார் விசாரணை


அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவியிடம் போலீசார் விசாரணை
x
அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவியிடம் போலீசார் விசாரணை
தினத்தந்தி 18 April 2022 8:19 PM IST (Updated: 18 April 2022 8:19 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவியிடம் போலீசார் விசாரணை

கோவை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த சில  பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.

மேலும் கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்டு முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதற்காக மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுகுட்டியிடம் கோவையில் வைத்து போலீசார் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, கோவை மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக உள்ள அனுபவ் ரவியிடம், விபத்தில் சிக்குவதற்கு முன்பு கனகராஜ் பேசியதாக தெரிகிறது. 


எனவே அவரிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். எனவே விசாரணைக்கு ஆஜராகும்படி அனுபவ் ரவிக்கு போலீசார் சம்மன் அனுப்பினார்கள். இதையடுத்து அவர் நேற்று காலை 11 மணிக்கு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அறையில் ஆஜரானார். 

அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை மாலை 5 மணி வரை நீடித்தது. பின்னர் அவர் வீட்டிற்கு சென்றார். ஏற்கனவே அனுபவ் ரவி தன்னிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள கூடாது என சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். 

அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அ
வரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். 6 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், கனகராஜ் விபத்தில் உயிரிழப்பதற்கு முன்பு செல்போனில் பேசியது என்ன?, 2 பேருக்கும் இடையே என்ன தொடர்பு? என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தொடர்பாக அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. 

இந்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., அவருடைய மகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவியிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

1 More update

Next Story