மூங்கில்துறைப்பட்டு பகுதியில் 100 ரூபாயை கடந்த தக்காளி விலை


மூங்கில்துறைப்பட்டு பகுதியில் 100 ரூபாயை கடந்த தக்காளி விலை
x
தினத்தந்தி 18 May 2022 4:29 PM GMT (Updated: 18 May 2022 4:29 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தக்காளி விலை 100 ரூபாயை கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மூங்கில்துறைப்பட்டு, 

ஒவ்வொரு வீட்டின் அன்றாட சமையலிலும் தவறாமல் இடம் பெறுவது தக்காளி. இதன் நிறமும், சுவையும் இதனை சமையலில் சேர்க்கத் தூண்டினாலும், அதன் விலை அவ்வப்போது நம்மை பயமுறுத்தத்தான் செய்கிறது. 
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.75 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. 
இந்த நிலையில் நேற்று காலை ஒரு கிலோ தக்காளி 105 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டது. சில இடங்களில் தக்காளி விற்பனை செய்யப்படவில்லை. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர். 
பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி குறைந்த அளவே வருவதாலும், தென் மாவட்டங்களில் பெய்த திடீர் மழை காரணமாக அந்த பகுதிகளில் நடைபெற்று வந்த தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும், தக்காளி விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 
ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வினால் கவலையில் உள்ள இல்லத்தரசிகள், தற்போது தக்காளி விலை உயர்வினால் மிகுந்த கவலையில் உள்ளனர். 

Next Story