வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்


வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்
x
தினத்தந்தி 18 May 2022 4:33 PM GMT (Updated: 18 May 2022 4:33 PM GMT)

வால்பாறையில் தொடரும் மழையால் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியது.

வால்பாறை

வால்பாறையில் தொடரும் மழையால் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தொடரும் மழை

வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அவ்வபோது கோடைமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அசானி புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. 

வழக்கமாக வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் பெய்ய வேண்டிய கோடைமழை ஏப்ரல் மாதத்தில் இருந்தே பெய்ய தொடங்கியது. 

இதன் தொடர்ச்சியாக அசானி புயல் காரணமாகவும் மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறையில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக வால்பாறை வட்டார பகுதிகளில் விட்டுவிட்டு ெதாடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது.

மலைப்பாதையில் பனிமூட்டம்

இவ்வாறு பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக எதிரேவரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். 

மேலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகனங்களை டிரைவர்கள் இயக்கினர். சில சுற்றுலா பயணிகள் பனிமூட்டம் காரணமாக வாகனங்களை இயக்க முடியாமல், சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தனர்.

வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கடும் பனிமூட்டர் நிலவி வருவதாலும் சுற்றுலா வருபவர்கள் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர். இதேபோல வனத்துறை சோதனைச்சாவடியிலும்் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

மழையளவு

வால்பாறை பகுதியில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை நிலவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
மேல்நீரார்-20 மி.மீ, சோலையாறு அணை- 18, கீழ்நீரார்-16, வால்பாறை-12 மழையும் பதிவாகி உள்ளது.

சோலையாறு அணைக்கு வினாடிக்கு 59.50 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 28.38 அடியாக உயர்ந்துள்ளது.

Next Story