குளச்சலில் வள்ளம்-கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


குளச்சலில் வள்ளம்-கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 18 May 2022 4:37 PM GMT (Updated: 18 May 2022 4:37 PM GMT)

குளச்சலில் பலத்த சூறைக்காற்று வீசியதால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

குளச்சல்:
குளச்சலில் பலத்த சூறைக்காற்று வீசியதால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
குளச்சல் மீன்பிடி துறைமுகம்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட  வள்ளம், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது.
 விசைப்படகுகள் ஆழ்கடலில் சுமார் 12 நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புகின்றனர். வள்ளம்-கட்டுமர மீனவர்கள் தினமும் அதிகாலை 3 மணிக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு காலை 10 மணி முதல் கரைக்கு திரும்புவது வழக்கம். கடந்த 2 நாட்களாக குளச்சல் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வந்தது.
சூறைக்காற்று வீசியது
இந்தநிலையில் நேற்று அதிகாலை கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் கடலில் ராட்சத அலைகள் எழுந்து சீற்றத்துடன் காணப்பட்டது. இதன்காரணமாக வள்ளம், கட்டுமர மீனவர்கள்  மீன் பிடிக்க செல்லவில்லை. 
மேலும், மீனவர்கள் தங்களது வள்ளம், கட்டுமரங்களை மேடான மணற்பரப்பிற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தினர். இதனால், குளச்சலில் நேற்று மீன் வரத்து குறைந்தது. மீன்கள் கிடைக்காததால் மீன் பிரியர்கள் மற்றும் வியாபாரிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story