தொடர் மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது


தொடர் மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 18 May 2022 4:58 PM GMT (Updated: 18 May 2022 4:58 PM GMT)

திருப்பத்தூரில் பெய்த தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பெய்த தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

இடி- மின்னலுடன் மழை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் கன மழை தொடர்ந்து பெய்தது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரிமலை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இடி- மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. விளம்பர பேனர்கள் மற்றும் மேற்கூரைகள் காற்றில் பறந்ததது.

மழை காரணமாக இரவு 10 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருப்பத்தூர் பகுதியில் அதிகாலை 4 மணி அளவில்தான் மின்சாரம் கொடுக்கப்பட்டது. பல்வேறு கிராமங்களில் விடிய விடிய மின்சாரம் தடைப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

பொதுத் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் அவதிப்பட்டனர். திருப்பத்தூரில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. பல்வேறு தெருக்கள் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. டி.எம்.சி. காலனி, அண்ணா நகர், கலைஞர் நகர், பழனிச்சாமி ரோடு ஆகிய பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் கழிவு நீருடன் கலந்து வீடுகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

திருப்பத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பல நூறு ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

ஜோலார்பேட்டை

ஏலகிரி ஏரி மற்றும் சந்தைக்கோடியூர் ஏரி நிரம்பியது. மழை காரணமாக ஜோலார்பேட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை மின் வினியோகம் தடைபட்டது.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள சரக்கு ரெயில் பழுது பார்க்கும் பணிமனையில் மழை நீர் புகுந்தது. இதனால் தொழிலாளிகளின் பாதுகாப்பு கருதி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பகுதியில் சோமநாயக்கன்பட்டி, வெலக்கல்நத்தம், ஜங்கலாபுரம், ஆத்தூர் குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது

திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஆலங்காயம்- 44, நாட்றம்பள்ளி- 23.20, திருப்பத்தூர் சர்ளக்கரை ஆலை பகுதி- 21, வாணியம்பாடி- 16, திருப்பத்தூர்- 10.10, ஆம்பூர் சக்கரை ஆலை பகுதி- 9, ஆம்பூர்-5. 

Next Story