51 எம்.பிக்கள், 71 எம்.எல்.ஏக்கள் மீது 121 வழக்குகள் நிலுவையில் உள்ளன - சுப்ரீம் கோர்ட்டு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்


51 எம்.பிக்கள், 71 எம்.எல்.ஏக்கள் மீது 121 வழக்குகள் நிலுவையில் உள்ளன - சுப்ரீம் கோர்ட்டு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:13 PM GMT (Updated: 15 Nov 2022 12:14 PM GMT)

எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது சிபிஐ பதிவு செய்த 121 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

எம்.பி.,க்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்குமாறு சிபிஐ மற்றும் பிற அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கண்காணித்தாலும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் பல, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதாகவும் மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்தார்.

5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் மற்றும் அவற்றை விரைந்து முடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அளிக்குமாறு அனைத்து ஐகோர்ட்டுகளுக்கும் முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அரசியல்வாதிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு பெஞ்ச் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா சுப்ரீம் கோர்ட்டில் தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ்(பிஎம்எல்ஏ), அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் 51 எம்.பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், மேலும், 51 எம்பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அவர்களில் தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) எத்தனை பேர் என்பது குறித்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ பதிவு செய்த 121 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story