அரியானாவில் திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் - முதல்-மந்திரி அறிவிப்பு


அரியானாவில் திருமணம் ஆகாதவர்களுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் - முதல்-மந்திரி அறிவிப்பு
x

அரியானாவில் திருமணம் ஆகாதவர்கள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.

சண்டிகர்,

அரியானா மாநில அரசு ஏற்கனவே 60 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது 45 முதல் 60 வயதுக்குட்பட்ட குறைந்த வருமானம் கொண்ட திருமணமாகாதவர்கள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் வழங்குவதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அதன்படி ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சத்திற்கு குறைவாக உள்ள 45-60 வயதுக்குட்பட்ட திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாதம் ரூ.2,750 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். அதேபோல், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள 40-60 வயதுடைய ஆண் மற்றும் பெண் விதவைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,750 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் ஆண்டுக்கு ரூ.240 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட வயது மற்றும் வருமான வரம்பில் மொத்தம் 65 ஆயிரம் திருமணமாகாதவர்கள் மற்றும் 5,687 விதவைகள் உள்ளனர் என்று முதல்-மந்திரி கட்டார் கூறினார். மேலும் அவர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய இந்த ஓய்வூதியம் உதவும் என்று கூறிய அவர், 60 வயதை அடைந்த பிறகு அவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறினார்.


Next Story