விளைநிலத்தில் புகுந்து 2-வது நாளாக 10 காட்டு யானைகள் அட்டகாசம் மக்கள் போராட்டம்


விளைநிலத்தில் புகுந்து 2-வது நாளாக 10 காட்டு யானைகள் அட்டகாசம் மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Sep 2023 6:45 PM GMT (Updated: 3 Sep 2023 6:46 PM GMT)

மாஸ்தி அருகே விளைநிலத்தில் புகுந்து 2-வது நாளாக 10 காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் மக்கள், வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோலார் தங்கவயல்:-

காட்டு யானைகள் அட்டகாசம்

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா மாஸ்தி அருகே தமிழக வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி விளைநிலத்தில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10 காட்டு யானைகள், விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தன.

இதனால் விளைநிலத்தில் சாகுபடி செய்திருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமாகின. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்துடன் கிராம மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்டியடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

2-வது நாளாக..

இந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் 10 காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்த வெளியேறி விளைநிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்தன. அந்த யானைகள் மாஸ்தி அருகே சங்கேனஹள்ளி கிராமத்தையொட்டி உள்ள விளைநிலத்தில் புகுந்து, அங்கு பயிரிட்டிருந்த நெல், கேழ்வரகு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தின.

இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் அளித்தும், அவர்கள் சம்பவ இடத்துக்கு வரவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், வனத்துறை அலுவலகத்துக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்குவதாகவும் உறுதி அளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.




Next Story