108-வது இந்திய அறிவியல் மாநாடு: ஜன 3-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி


108-வது இந்திய அறிவியல் மாநாடு: ஜன 3-ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 1 Jan 2023 8:28 AM GMT (Updated: 1 Jan 2023 8:32 AM GMT)

108-வது இந்திய அறிவியல் மாநாட்டை வரும் 3-ம் தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,

ஆண்டுதோறும் நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் இந்திய அறிவியல் மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக இந்த மாநாடு நடைபெறவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 108-வது இந்திய அறிவியல் மாநாட்டிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 2023, ஜனவரி 3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாக்பூரில் தொடங்கும் மாநாடு ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடக்கி வைக்க உள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்திய அறிவியல் மாநாட்டின் போது இந்திய மாணவர்களுக்கு இடையே அறிவியல் குறித்த புதிய தாக்கத்தை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

பெண்களுக்கான அதிகாரமளித்தலுடன் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எனும் கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த அறிவியல் மாநாடானது கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெறுகிறது.


Next Story