முப்படைகளில் 11 ஆயிரம் பெண்கள் மக்களவையில் மத்திய மந்திரி தகவல்


முப்படைகளில் 11 ஆயிரம் பெண்கள் மக்களவையில் மத்திய மந்திரி தகவல்
x

அதிகபட்சமாக, ராணுவத்தில் 7 ஆயிரத்து 54 பெண்கள் பணியாற்றுகிறார்கள்.

புதுடெல்லி,

மக்களவை கேள்வி நேரத்தில் ராணுவ இணை மந்திரி அஜய்பட் ஒரு கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-

கடந்த ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி, முப்படைகளில் 11 ஆயிரத்து 414 பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் அதிகாரிகள், மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங் ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் பெண்களும் அடங்குவர். அதிகபட்சமாக, ராணுவத்தில் 7 ஆயிரத்து 54 பெண்கள் பணியாற்றுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-

கடந்த 2022-ம் ஆண்டுவரை, மாற்று சிறுநீரகம் கோரி, சுமார் 40 ஆயிரம் நோயாளிகள் பதிவு செய்திருந்தனர். அவர்களில், 11 ஆயிரத்து 705 பேருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. 13 ஆயிரத்து 430 நோயாளிகள் கல்லீரலுக்காக பதிவு செய்ததில், 3 ஆயிரத்து 920 பேருக்கு மாற்று கல்லீரல் பொருத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு மன்சுக் மாண்டவியா அளித்த பதில் வருமாறு:-

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின்கீழ், நாள்தோறும் ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரையிலான செலவு ரசீதுகள் பெறப்படுகின்றன. அவற்றுக்கு ஒரே நாளில் பணம் செலுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்னொரு கேள்விக்கு மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-

சந்தையில் விற்பனை செய்யப்படும் இயற்கை மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களில் 200 மாதிரிகள், உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story