13 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி நிச்சயம் கிடைக்கும்


13 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி நிச்சயம் கிடைக்கும்
x

தகுதி தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 13 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி நிச்சயம் கிடைக்கும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா உறுதி அளித்துள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் மகேஷ் தெங்கினிகாய் எழுந்து, "கடந்த பா.ஜனதா ஆட்சியில் 15 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 13 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை நியமிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தங்களின் குழந்தைகளுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால் அந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும்" என்றார்.

இதற்கு பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா பதிலளிக்கையில், "முந்தைய பா.ஜனதா ஆட்சியில் 13 ஆயிரம் ஆசிரியர்கள் தகுதி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பணி வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் சில சட்ட சிக்கல் உள்ளது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பணி ஆணை வழங்கக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிட்டுள்ளது. ஆனால் மற்ற பணிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளோம். அந்த 13 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி நிச்சயம் கிடைக்கும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. வருகிற 17-ந் தேதி இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு அனுமதி பெறப்படும்" என்றார்.


Next Story