13 வயது சிறுமி பலாத்காரம்: ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை


13 வயது சிறுமி பலாத்காரம்:  ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:46 PM GMT)

தாவணகெரேயில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தாவணகெரே-

தாவணகெரேயில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ஆட்டோ டிரைவர்

தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா பகுதியை சேர்ந்தவர் மஞ்சு (வயது23). இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். சிறுமி அப்பகுதி வழியாக பள்ளிக்கு செல்லும்போது மஞ்சு அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் சிறுமிக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் சிறுமியை மஞ்சு ஆட்டோவில் பல்வேறு இடங்களில் அழைத்து சென்றுள்ளார்.

மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சிறுமி பள்ளிக்கு சென்றாள். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த மஞ்சு சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார்.

சிறுமி பலாத்காரம்

பின்னர் அதேப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் வைத்து சிறுமியை மஞ்சு பலாத்காரம் செய்தார். அப்போது சிறுமியிடம் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என அவர் மிரட்டி உள்ளார். பின்னர் சிறுமி அங்கிருந்து வீட்டிற்கு வந்தாள். இந்தநிலையில் பெற்றோரிடம் சிறுமி பேசாமல் இருந்துள்ளாள்.

இதுகுறித்து பெற்றோர் அவளிடம் கேட்டனர். அப்போது தனக்கு நடந்த கொடுமைகளை சிறுமி பெற்றோரிடம் கூறினாள். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் ஹரிஹரா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

20 ஆண்டு சிறை

பின்னர் மஞ்சுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு தாவணகெரே மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. ஹரிஹரா போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சிரபாத் தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை பலாத்காரம் செய்த மஞ்சுவிற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 17 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.


Next Story