14 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை


14 வயது சிறுமி பலாத்கார வழக்கில்  வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 7 Aug 2023 6:45 PM GMT (Updated: 7 Aug 2023 6:46 PM GMT)

14 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சிவமொக்கா-

14 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பாலியல் பலாத்காரம்

சிவமொக்கா டவுன் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் சிறுமியின் வீட்டின் அருகே கட்டிட பணி நடந்து கொண்டு இருந்தது. இதில் அதேப்பகுதியை சேர்ந்த கரிபசப்பா(வயது27) என்பவர் வேலை செய்தார். அப்போது சிறுமிக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் செல்போன் மூலம் பேசி வந்தனர். இந்தநிலையில் சிறுமியை கரிபசப்பா பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு பள்ளி முடிந்து வீட்டிற்கு சிறுமி நடந்து சென்று கொண்டு இருந்தாள். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கரிபசப்பா, சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது அவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை கரிபசப்பா மிரட்டி உள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

வாலிபர் கைது

இந்தநிலையில் சிறுமி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளாள். இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் கேட்டனர். அப்போது தனக்கு நடந்த கொடுமைகளை அவள் பெற்றோரிடம் கூறி அழுதாள். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிவமொக்கா புறநகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரிபசப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது. சிவமொக்கா புறநகர் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

20 ஆண்டு சிறை

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கரிபசப்பாவுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதமும் விதித்தார்.

அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 9 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Next Story