மைசூருவில் இன்று 144 தடை


மைசூருவில் இன்று 144 தடை
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:46 PM GMT)

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி இன்று மைசூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மைசூரு

காவிரி விவகாரம்

கர்நாடகம்- தமிழகம் இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சினை நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து பெங்களூருவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கன்னட அமைப்பினர், விவசாயிகள் போராட்டம் நடத்தினர் இந்தநிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடக முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

இதையொட்டி மைசூரு மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு்ள்ளது.

முழு அடைப்பு

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மைசூரு மாவட்டம் உள்பட மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்தநிலையில் மத்திய, மாநில அரசு அலுவலங்கள், கபினி அணை, பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை. மேலும் அந்தப்பகுதிகளில் கூட்டம் சேரவும், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாகவும் வர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்துபவர்கள் அமைதியான முறையில் நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது.

பொதுசொத்துக்களை சேதப்படுத்த கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story