மோட்டார் சைக்கிள் விபத்தில் கேரள வாலிபர்கள் 2 பேர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் கேரள வாலிபர்கள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 8 Sep 2023 6:45 PM GMT (Updated: 8 Sep 2023 6:46 PM GMT)

மோட்டார் சைக்கிள் விபத்தில் கேரள வாலிபர்கள் 2 பேர் பரிதாபமமாக இறந்தனர்.

சிக்கமகளூரு-

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் அதுல் (வயது 24), ரிஷிகேஷ் (25). இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும், மோட்டார் சைக்கிளில் கோவாவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவுக்கு சென்றனர்.

பின்னர் அங்கு சுற்றுலாவை முடித்து கொண்டு 2 பேரும் திரும்பி மோட்டார் சைக்கிளில் பெங்களூருவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அதுல் ஓட்டினார். அப்போது, 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தாவணகெரே பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, அதுலின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், அவர்கள் 2 பேரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாவணகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாவணகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story