மங்களூருவில் ஷோரூமுக்குள் புகுந்து 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு


மங்களூருவில் ஷோரூமுக்குள் புகுந்து 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
x
தினத்தந்தி 2 Sep 2023 6:45 PM GMT (Updated: 2 Sep 2023 6:45 PM GMT)

மங்களூருவில் ஷோரூமுக்குள் புகுந்து 2 மோட்டார் சைக்கிள்கள் திருடி மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் கத்ரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் பள்ளி அருகே இரு சக்கர வாகன ஷோரூம் அமைந்துள்ளது. அங்கு தினமும் ஏராளமான வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி முடிந்து ஷோரூம் ஊழியர்களும், அதிகாரிகளும் தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த யாரோ மர்ம நபர்கள் ஷோரூமின் இரும்பு ஷெட்டர் கதவை உடைத்து உள்ளே புகுந்து 2 மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்றுவிட்டனர். நேற்று காலையில் பணிக்கு வந்த ஷோரூம் ஊழியர்கள் அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுபற்றி ஷோரூம் மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் இதுபற்றி கத்ரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story