20 மாடுகள் மீது திராவகம் வீசிய கொடூரம்


20 மாடுகள் மீது திராவகம் வீசிய கொடூரம்
x

பெங்களூரு அருகே 20 மாடுகள் மீது திராவகம் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் அருகே ஒரு விவசாயி வசித்து வருகிறார். இந்த விவசாயி 20 மாடுகளை வளர்த்து வருகிறார். அந்த மாடுகள் மூலம் பால் கறந்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விவசாயி வீட்டின் அருகே உள்ள கொட்டகைக்குள் புகுந்த மர்மநபர்கள் 20 மாடுகள் மீதும் திராவகம் வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் மாடுகளின் வயிறு, முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

நேற்று காலை விவசாயி எழுந்து பார்த்த போது மாடுகள் மீது மர்மநபர்கள் திராவகம் வீசி சென்றது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் கால்நடை மருத்துவர்கள், ஆனேக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாடுகளை பார்வையிட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். மாடுகள் மீது திராவகம் வீசி சென்ற மர்மநபர்கள் யார் என்று தெரியவில்லை.


Next Story