பொதுமக்கள் முன்னிலையில் சிறுவர்களை ஓட, ஓட விரட்டி தாக்கிய மந்திரி


பொதுமக்கள் முன்னிலையில்  சிறுவர்களை ஓட, ஓட  விரட்டி தாக்கிய மந்திரி
x
தினத்தந்தி 31 May 2017 10:55 AM GMT (Updated: 31 May 2017 10:55 AM GMT)

பொதுமக்கள் முன்னிலையில் மந்திரி சிறுவர்களை ஓட, ஓட விரட்டியடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.


போபால்,

மத்தியபிரதேசத்தில் உணவுத்துறை மந்திரியாக இருப்பவர் ஓம்பிரகாஷ் துருவே.  சமீபத்தில் 3 அரசு அதிகாரியை பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாக திட்டினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.தற்போது திருமண விழா ஒன்றில் சிறுவர்களை ஓட, ஓட விரட்டியடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அங்குள்ள திந்தோரி என்ற இடத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. இதில், மந்திரி ஓம்பிரகாஷ் துருவே கலந்து கொண்டார். அப்போது மணமக்கள் ஊர்வலம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் நடனம் ஆடினார்கள். மந்திரி ஓம்பிரகாஷ் துருவேவும் தான் மந்திரி என்பதை கூட மறந்து விட்டு நடனம் ஆடினார்.அப்போது ரூபாய் நோட்டுகளை மந்திரியும், மற்றவர்களும் வீசி எறிந்தனர்.

இந்த பணத்தை சிறுவர்கள் போட்டி போட்டு எடுத்தனர். அப்போது சிறுவர்களின் செயல் மந்திரிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.இதனால் அவர் சிறுவர்களை தாக்கினார். அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய போதும் ஓட, ஓட விரட்டி அவர்களை அடித்தார். இதை செல்போன் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது, வைரலாக பரவி வருகிறது. 



Next Story