காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் நுகம் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே நேற்று அதிகாலையில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் சிலர் எல்லை தாண்டி ஊடுருவ முயற்சித்ததை ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை சரண் அடைந்துவிடும்படி ராணுவ வீரர்கள் எச்சரித்தனர்.
ஆனால் அதற்கு செவிசாய்க்காத அவர்கள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே எல்லையை நோக்கி முன்னேற தொடங்கினர். அதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்கபதிலடி கொடுத்தனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவில் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டார் பகுதிக்குள் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். ராணுவ வீரர்கள் பதில் தாக்குதலை தொடுத்தபோது, பயங்கரவாதிகள் இருளை பயன்படுத்தி தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டார் பகுதியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் மூலம் 24 மணி நேரத்தில், 2 ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story