விஜய் மல்லையா இல்லாமல் தண்டனையை வழங்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு


விஜய் மல்லையா இல்லாமல் தண்டனையை வழங்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 14 July 2017 11:19 AM GMT (Updated: 14 July 2017 11:19 AM GMT)

மல்லையாவை ஜனவரி 2018-க்கு முன்னால் இந்தியாவிற்கு நாடு கடத்த முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,


பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 61). இவர் பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி தப்பி விட்டார். அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கு மறுத்து விட்டார். இதன் காரணமாக ராஜ்யரீதியிலான அவரது பாஸ்போர்ட்டு முடக்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தனது நிறுவன பங்குகளை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டாஜியோ நிறுவனத்திடம் விற்று கிடைத்த பணத்தில் 40 மில்லியன் டாலரை (சுமார் ரூ.260 கோடி), நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தனது மகன் சித்தார்த் மல்லையா, மகள்கள் லீனா மல்லையா, தான்யா மல்லையா ஆகியோருக்கு விஜய் மல்லையா மாற்றி, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார். இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் முன்னிலையில் கடந்த மே மாதம் 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, விஜய் மல்லையாவை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறினார். அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் முடிவில், “இந்த வழக்கில் எதிர்வழக்குதாரராக சேர்க்கப்பட்டுள்ள மூன்றாவது நபர் (விஜய் மல்லையா) நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளி” என அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து வழக்கில் வழங்கப்பட உள்ள தண்டனை தொடர்பாக தனது தரப்பு கருத்தை கூறுவதற்கு விஜய் மல்லையா ஜூலை 10-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் விஜய் மல்லையா ஆஜராகவில்லை. சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணையின் போது மத்திய அரசிடம் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியது. மத்திய அரசு சார்பில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பதிலையடுத்து சுப்ரீம் கோர்ட்டு விஜய் மல்லையா இல்லாமல் தண்டனை வழங்க முடியாது என கூறிவிட்டது. 

விஜய் மல்லையாவை கோர்ட்டில் ஆஜர் படுத்தும் போது தண்டனையை அறிவிப்பதாக கூறிவிட்டது. விஜய் மல்லையாவை கோர்ட்டில் ஆஜர் படுத்தாமல் இவ்வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்ல முடியாது என கோர்ட்டு தெரிவித்துவிட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கேகே வேணுகோபால், மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் கோர்ட்டில் உள்ளது, விசாரணையானது டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது, 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டுவருவோம் என நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டு உள்ளார். 


Next Story