ரூ.4000 ஆயிரத்திற்காக தொழிலாளியை நாய் கூண்டுக்குள் அடைத்த முதலாளி


ரூ.4000 ஆயிரத்திற்காக தொழிலாளியை நாய் கூண்டுக்குள் அடைத்த முதலாளி
x
தினத்தந்தி 5 Sep 2017 6:29 AM GMT (Updated: 5 Sep 2017 6:29 AM GMT)

கர்நாடகாவில், ரூ.4000 ஆயிரத்திற்காக தொழிலாளியை நாய் கூண்டுக்குள் அடைத்த முதலாளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரியை சேர்ந்தவர் கிஷன் (47). இவருக்கு சொந்தமான காஃபி தோட்டத்தில் ஹரீஷ் (32) என்ற கூலித் தொழிலாளி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிஷனிடம் ரூ.4 ஆயிரத்தை கடனாக வாங்கியுள்ளார். இதனை திருப்பி கொடுக்காமல், ஹரீஷ் வேலையை விட்டு நின்றுள்ளார்.          

இந்நிலையில், கடந்த 29ம் தேதி கிஷன் கொடுத்த பணத்தை திருப்பி பெறுவதற்கு அவரது நண்பர் மதுவுடன் ஹரீஷை தேடிச் சென்றுள்ளார். அவரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதனை வட்டியுடன் திருப்பி செலுத்த மறுத்த ஹரீஷை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அடித்து இழுத்துச் சென்று தனது காஃபி தோட்டத்தில் உள்ள நாய் கூண்டில் அடைத்துள்ளார். அப்போது கூண்டில் இருந்த இரண்டு நாய்கள் கடித்ததில் ஹரீஷ்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில், வலி தாங்க முடியாமல் தவித்த ஹரீஷின் சத்தம் கேட்டு மற்ற தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து காயத்தால் துடித்த ஹரீஷை மீட்டு அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக தகவலறிந்த பொன்னம்பேட்டை போலீசார் ஹரீஷிடம் விசாரணை நடத்தினர். அவரது புகாரின் பேரில் கிஷன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், ஹரீஷ் மேல் சிகிச்சைக்காக மைசூரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Next Story