பள்ளியில் தண்டனையாக மாணவர்கள் கழிவறையில் நிறுத்திவைக்கப்பட்ட மாணவி

பள்ளிக்கு சீருடையில் வராத மாணவிக்கு தண்டனையாக மாணவர்கள் கழிவறையில் நிறுத்தி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
ஐதராபாத்,
ஐதராபாத் ஆர் சி புரம் பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவி சீருடைய அணியாமல் வழக்கமான ஆடையுடன் வந்தமைக்காக தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. மாணவிக்கு தண்டனையாக அவர் மாணவர்கள் கழிவறையில் வலுக்கட்டாயமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவத்தை அடுத்து பள்ளிக்கு எதிராக அப்பகுதியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த தெலுங்கானா ஐடி மந்திரி கே டி ராமா ராவ், இப்பிரச்சனையை கல்வித்துறை மந்திரி காதியாம் ஸ்ரீஹரியிடம் கொண்டு செல்வதாக குறிப்பிட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட மாநில அரசு, மாவட்ட கல்வித்துறை அதிகாரி அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டு உள்ளது.
சனிக்கிழமை பள்ளிக்கு சீருடை அணியாமல் சென்ற என்னுடைய மகளை விளையாட்டு கல்வி ஆசிரியை ஆண்கள் கழிவறையில் நிற்க செய்து துன்புறுத்தி உள்ளார் என சிறுமியின் தந்தை கூறிஉள்ளார். “இன்று ஒருநாள் மட்டும் சீருடையில்லாமல் அனுமதிக்குமாறு டைரியில் எழுதி கொடுத்து இருந்தோம் என்னுடைய மகளும் அதனை ஆசிரியையிடம் காட்டிஉள்ளார், ஆனால் ஆசிரியை அது பற்றி கவலைப்படாமல் என்னுடைய மகளை இவ்வாறு நடத்தி உள்ளார். என்னுடைய மகளை மாணவர்கள் கழிவறைக்கு இழுத்து சென்று அங்கு நிற்கே செய்து உள்ளார் என கண்ணீர் மல்க கூறிஉள்ளார்.
ஆசிரியையின் இந்த நடவடிக்கையினால் என்னுடைய மகளுக்கு மோசமான மனநிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது, என்னுடைய மகளின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார். என்னுடைய மகளால் பிற மாணவர்களின் முகத்தைகூட பார்க்கமுடியவில்லை, அவள் அவமானமாக உணர்கிறாள் என கூறிஉள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட ஆசிரியை நான் அவ்வாறு எல்லாம் நடத்தவில்லை, ஏன் சீருடை அணியவில்லை என்றுதான் கேட்டேன் என்றார். மாணவி மாணவர்களின் கழிவறை அருகே நின்றார், அவரை உள்ளே எல்லாம் நிற்க சொல்லவில்லை என கூறிஉள்ளார் ஆசிரியை.
கே டி ராமா ராம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள தகவலில், “முற்றிலும் மனித தன்மையற்ற செயலாகும், இப்பிரச்சனையில் சரியான நடவடிக்கையை எடுக்க செய்ய துணை முதல்-மந்திரியிடம் எடுத்துச் செல்வேன்,” என குறிப்பிட்டு உள்ளார். மாணவி நடத்தப்பட்ட விதத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story