சோபியான் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சோபியான் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், இருதரப்பு இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்துக்கு உட்பட்ட கதிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படை தொடங்கியது. குறிப்பிட்ட ஒரு பகுதியை நோக்கி வீரர்கள் முன்னேறிய போது அங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி தானியங்கி ஆயுதங்களால் தாக்குதலில் ஈடுபட்டனர். உடனே வீரர்களும் திருப்பி தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர சண்டை மூண்டது.
இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் அங்கே மறைந்திருக்கும் மற்ற பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியவாறே இருந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக வடக்கு காஷ்மீரின் லாதோராவில் நடந்த என்கவுண்டரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவன் காலித் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story