காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதில் பலத்த அடி ராஜ்நாத் சிங் பேச்சு


காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதில் பலத்த அடி ராஜ்நாத் சிங் பேச்சு
x
தினத்தந்தி 10 Oct 2017 11:57 PM GMT (Updated: 10 Oct 2017 11:57 PM GMT)

தேசிய புலனாய்வு முகமையின் கடும் நடவடிக்கைகளால் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதில் பலத்த அடி விழுந்துள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமையின் தலைமை அலுவலகத்தை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பலத்த அடி

நாகரிக சமுதாயத்தை கொண்ட எந்தவொரு நாடும் பயங்கரவாதத்தை தனது மண்ணில் அனுமதிக்காது. ஆனால் நமது அண்டை நாடு(பாகிஸ்தான்) ஒன்று காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்து வருகிறது.

ஆனால் தேசிய பாதுகாப்பு முகமையின் கடும் நடவடிக்கைகளால் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது தடுக்கப்பட்டு உள்ளது. இது அந்த மாநிலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கும், பிரிவினைவாதிகளுக்கும் விழுந்த பலத்த அடி ஆகும்.

உயர் மதிப்பு கொண்ட கள்ள நோட்டுகள் பயங்கரவாதத்துக்கு உயிர் மூச்சாக இருந்தது. அந்த உயிர் மூச்சு தற்போது துண்டிக்கப்பட்டு உள்ளது. காஷ்மீரில் தினமும், குறைந்த பட்சம் 5, 6 பயங்கரவாதிகளாவது ராணுவம், துணை ராணுவம் மற்றும் பாதுகாப்பு முகமைகளின் தீவிரமான நடவடிக்கைகளுக்கு பலியாகின்றனர்.

பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் ஆதாராங்களை சேகரிப்பது பெரும் சவால் ஆகும். இதுபோன்ற வழக்குகளில் 95 சதவீத அளவிற்கு தேசிய புலனாய்வு முகமை தண்டனை பெற்றுக் கொடுத்து இருப்பது பாராட்டுக்குரியது.

மோடிக்கு வெற்றி

இந்த அமைப்பு பொறுப்புடனும், பாரபட்சம் இன்றியும் செயல்பட்டு வருகிறது. தொழில் ரீதியாகவும், அறிவியல் பூர்வமான விசாரணையிலும் சிறந்து திகழ்கிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு பயங்கரவாதம் பெரும் தடையாக இருக்கிறது. சர்வதேச அளவில் இப்பிரச்சினையை கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்ப்பதில் பிரதமர் மோடி வெற்றி கண்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தேசிய புலானய்வு முகமையின் தலைமை இயக்குனர் சரத்குமார் பேசுகையில், தங்கள் முகமை கடந்த 8 ஆண்டுகளில் 166 பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை கையாண்டு இருப்பதாக குறிப்பிட்டார். 

Next Story