சிறுமியை கற்பழித்து கொன்ற 3 பேருக்கு தூக்கு தண்டனை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


சிறுமியை கற்பழித்து கொன்ற 3 பேருக்கு தூக்கு தண்டனை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Nov 2017 3:45 AM IST (Updated: 11 Nov 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் சிறுமியை கற்பழித்து கொன்ற 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

மும்பை, 

மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டம் லோனி மாவலா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி தனியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாள். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ் விஷ்ணு லோங்கர் (வயது36), மங்கேஷ் தத்தாராய் லோங்கர் (30), தத்தாராய் ஷிண்டே (27) ஆகிய 3 பேர் அவளை பின்தொடர்ந்து வந்தனர்.

இதை கவனித்த சிறுமி தனது வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். இருப்பினும் 3 பேரும் அவளை விடாமல் துரத்தி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அவளை பிடித்து மானபங்கம் செய்தனர். அவளை தரதரவென இழுத்துச் சென்று கொடூரமாக கற்பழித்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சிறுமி உதவிகேட்டு அலறினாள். இதனால் கோபம் அடைந்த அவர்கள், சிறுமியை அங்கு கிடந்த கல்லால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் சிறுமியின் உடலை சகதிக்குள் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது அகமதுநகர் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நிறைவு பெற்றதையடுத்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி சுவர்ணா கேவலே, ‘சிறுமி ஈவு, இரக்கமற்ற முறையில் கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். குற்றவாளிகள் சந்தோஷ் விஷ்ணு லோங்கர், மங்கேஷ் தத்தாராய் லோங்கர் மற்றும் தத்தாராய் ஷிண்டே ஆகிய 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது’ என்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.

இதே அகமதுநகர் மாவட்டம் கோபர்டி கிராமத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14 வயது சிறுமி 3 பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், வருகிற 18-ந் தேதி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூற இருப்பது குறிப்பிடத்தக்கது. 
1 More update

Next Story