ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் புயல் மழைக்கு 42 பேர் பலி


ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் புயல் மழைக்கு 42 பேர் பலி
x
தினத்தந்தி 13 April 2018 6:03 AM GMT (Updated: 13 April 2018 6:03 AM GMT)

ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட புயல் மழைக்கு 42 பேர் பலியாயினர்.

ஜெய்ப்பூர்,

மேற்கு உத்தரப்பிரதேசத்திலும், கிழக்கு ராஜஸ்தானிலும் புதன்கிழமை இரவு கடுமையான இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 4 மணி நேர இடைவிடாது பெய்த இந்த பலத்தமழையால் பேரழிவு ஏற்பட்டது. இந்த புயல் மழை காரணமாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 42 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தானில் பாரத்பூர் மற்றும் தோல்பூர், உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா, மதுரா மற்றும் ஃபிரோசாபாத் மாவட்டங்களை புயல் தாக்கியது. இந்த புயல் காரணமாக பலர் வீடுகளை இழந்துள்ளனர். 

பல இடங்களில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சுற்றுப்புற சுவர் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் 200 பேருக்கு மேல் காயமடைந்தனர். மின்கம்பங்கள் 600-க்கு மேல் சரிந்தன. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பெரும்பகுதி இருளில் மூழ்கி தவித்து வருகிறது.

ஆக்ராவில் 14 பேர் உயிரிழந்தனர், அதே நேரத்தில் மதுரா மற்றும் ஃபிரோசாபாத்தில் ஏழு குழந்தைகள்,ராஜஸ்தானில், ஐந்து குழந்தைகள் உட்பட 14 பேர், தோல்பூரில் மற்றும் பாரத்பூர் மாவட்டத்தில் ஆறு பேரும் பலியாயினர். இந்த புயல் காரணமாக ஆக்ரா மற்றும் மதுரா வழியாக செல்லும் 25 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.

மாநில அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்குவதாக உத்திரவாதம் அளித்துள்ளது. ராஜஸ்தானில், டோல்பூர் மாவட்ட கலெக்டர் ஷுசி தியாகி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50,000  அறிவித்தார்.

Next Story