உண்ணாவிரத போராட்டத்தின்போது ‘சிப்ஸ்’ சாப்பிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள்


உண்ணாவிரத போராட்டத்தின்போது ‘சிப்ஸ்’ சாப்பிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள்
x
தினத்தந்தி 13 April 2018 10:45 PM GMT (Updated: 13 April 2018 10:33 PM GMT)

உண்ணாவிரதம் இருந்தபோது ‘சிப்ஸ்’ சாப்பிட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் சிக்கியுள்ளனர்.

மும்பை, 

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கிய எதிர்க்கட்சிகளை கண்டித்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மராட்டிய மாநிலம் புனே பாலகங்காதர் ரங்மந்திரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சஞ்சய் பெகடே, பிம்ராவ் தாம்கிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கு மத்தியில் அவர்கள் புனே கவுன்சில் ஹாலில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று கலந்து கொண்டனர். இதில் மாநில பாதுகாப்பு மந்திரி கிரிஷ் பாபத், மாவட்ட கலெக்டர் சவுரப்ராவ் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ‘சிப்ஸ்’, இனிப்பு போன்றவை வழங்கப்பட்டன.

இந்த உணவுப்பொருட் களை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சஞ்சய் பெகடேயும், பிம்ராவ் தாம்கிரும் சாப்பிட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

சமீபத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லும் முன் காங்கிரசார் சிலர் ஓட்டலில் சாப்பிடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் பரவியது. அந்த படங்களை வைத்து பா.ஜனதா, காங்கிரசை கேலி செய்து வந்தது.

இந்த நிலையில் பா.ஜனதாவினரும் உண்ணாவிரதத்தின் போது உணவு சாப்பிட்டு சிக்கிய சம்பவம் அக்கட்சியினருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story