சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தேசத்தின் மதிப்பை சீர்குலைக்கிறது; எம்.பி. ஹேமா மாலினி

நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது தேசத்தின் மதிப்பை சீர்குலைக்கிறது என பாரதீய ஜனதா எம்.பி. ஹேமாமாலினி இன்று கூறியுள்ளார். #HemaMalani
மதுரா,
உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியில் இருந்து பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யாக தேர்வானவர் நடிகை ஹேமா மாலினி. அவர் இன்று காலை தனது தொகுதியில் உள்ள பகத் சிங் பூங்காவில் இருந்து பள்ளிக்கு செல்லுங்கள் என்ற நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
அதன்பின்னர் அவர் பேசும்பொழுது, நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரம் மிக தீவிரம் நிறைந்தது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை தடுக்க ஏதேனும் செய்ய வேண்டும்.
நம்முடைய அரசாங்கம் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முயன்று வருவதுடன், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றார்.
அவர் தொடர்ந்து, நாம் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பெற்றோர்களும் ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்பொழுது தங்களது குழந்தைகளை கவனமுடன் பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார்.