வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு வழக்குகளிலும் பா.ஜனதா முதலிடம்


வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு வழக்குகளிலும் பா.ஜனதா  முதலிடம்
x
தினத்தந்தி 25 April 2018 2:30 PM GMT (Updated: 25 April 2018 2:30 PM GMT)

வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளிலும் பா.ஜனதா உறுப்பினர்களே முதலிடம் பிடித்து உள்ளார்கள். #HateSpeech #ADRReport #BJP


புதுடெல்லி,


 ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கையின்படி, பாரதீய ஜனதாவிலே அதிகமான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகளை எதிர்க்கொண்டு வருகின்றனர் என தெரியவந்தது.

இப்போது எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வாக இருப்பவர்களின் 4,896 வேட்பு மனுக்களில் 4,845 வேட்பு மனுக்களை இரு தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் ஆய்வு செய்தது. 768 எம்.பி.க்கள் மற்றும் 4,077 எம்.எல்.ஏ.க்களின் வேட்பு மனுக்களை ஆய்வு செய்தது. இதில் 1,580 (33 சதவிதம்) எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்து உள்ளனர், அவர்களில் 48 பேர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் பாரதீய ஜனதா முதலிடம் பிடித்தது. இதற்கு அடுத்தப்படியாக சிவசேனா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

பாரதீய ஜனதாவை சேர்ந்த 12 எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் வழக்குகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாட்டில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மீதான வழக்குகளிலும் பாரதீய ஜனதா எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் முதலிடம் வகிப்பதாகப் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது.

 ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) ஆய்வில் 15 எம்.பி.க்கள் (மக்களவை) மற்றும் 43 எம்.எல்.ஏ.க்கள் என பதவியில் உள்ள 58 பேர், வெறுப்பு பேச்சு வழக்குகளில் சிக்கியுள்ளதாக தெரியவந்து உள்ளது. சமூகத்தில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கருத்துகளை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளில் பா.ஜனதா முதலிடம் வகிக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த 10 எம்.பி.க்கள் உள்பட 27 பேர் மீது இந்த வழக்கு பதியப்பட்டு உள்ளது. 

இதைத்தவிர அனைத்து இந்திய மஜ்லிஸ் கட்சி மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகளுக்கு தலா 6, தெலுங்குதேசம், சிவசேனா தலா 3, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த தலா 2 பேரும் இந்த வழக்குகளில் சிக்கியுள்ளனர். மந்திரிகளை பொறுத்தவரை மத்திய குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் மந்திரி உமாபாரதி மற்றும் 8 மாநில மந்திரிகள் மீது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாக ஏ.டி.ஆர். அமைப்பு கூறியுள்ளது.

Next Story