130 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும், எடியூரப்பா நம்பிக்கை


130 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும், எடியூரப்பா நம்பிக்கை
x
தினத்தந்தி 13 May 2018 11:30 PM GMT (Updated: 13 May 2018 8:35 PM GMT)

130 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்றும், நாளை டெல்லி சென்று பதவி ஏற்பு விழா தேதியை முடிவு செய்வேன் என்றும் எடியூரப்பா அதீத நம்பிக்கையுடன் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று கூறுகின்றன. மேலும், பா.ஜனதா அல்லது காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெறும் என்று அவை சொல்கின்றன. இந்த நிலையில் இதுபற்றி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தகவல்களை சேகரித்தேன். பா.ஜனதா 125 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. 100-க்கு 100 சதவீதம் நாங்கள் ஆட்சியை பிடிப்போம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

மக்களின் ஆசி எங்களுக்கு உள்ளது. அதனால் பா.ஜனதாவின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதிகளவில் ஆர்வமுடன் வந்து வாக்களித்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். கர்நாடகத்தில் ஆளும் காங்கிரசுக்கு பலமான எதிர்ப்பு அலை உள்ளது. சித்தராமையா செய்த தவறுகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். காங்கிரஸ் அதிகபட்சமாக 70 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜனதா தளம் (எஸ்) கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்.

நாளை மறுநாள்(அதாவது நாளை) டெல்லிக்கு சென்று, பதவி ஏற்பு விழா தேதி குறித்து பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். நாளையே பதவி ஏற்பு விழா தேதியை அறிவிப்பேன். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 17-ந் தேதி நடைபெறும்

நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வேன். சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி ஆகிய 2 தொகுதியிலும் தோல்வி அடைவார். பா.ஜனதாவுக்கு கிடைத்த மக்களின் அமோக ஆதரவால், சித்தராமையா மன ரீதியாக பாதிக்கப்பட்டுவிட்டார். அதனால் இஷ்டம் போல் அவர் பேசுகிறார்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story