கர்நாடகாவில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கர்நாடக சட்டசபையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வஜூபாய் வாலா நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார். இது 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க வரிந்து கட்டிய ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் அணிக்கு பேரிடியாக அமைந்தது. இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும், ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமியும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ‘ரிட்’ வழக்கு தொடுத்தனர். வழக்கில், எடியூரப்பா முதல்–மந்திரி பதவி ஏற்க தடை விதிக்க கோரினர்.
இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமைத்தார். இந்த அமர்வு நள்ளிரவு கடந்து 2.11 மணிக்கு தன் விசாரணையை தொடங்கியது. நேற்று அதிகாலை 5.28 மணிக்கு விசாரணை முடிந்தது. இன்று காலை 10 45 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.
கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு பதவியேற்றதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு விசாரணை தொடங்கியது.
ஆளுநரின் முடிவுக்கு எதிராக தம்மையும் ஒரு வாதியாக சேர்க்குமாறு ராம் ஜெத்மலானி கோரிக்கை விடுத்து உள்ளார்.
மே 15, 16 தேதிகளில் ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடித நகல்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது அதன்படி தாக்கல் செய்யப்பட்டது.
மே 15 ஆம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லாததால் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது.
மே 16 ஆம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதரவு உள்ளது என்று கூறுயுள்ளது.
காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பாக கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிடுகின்றனர்.
முகுல் ரோத்தஹி வாதாடும் போது கூறியதாவது;-
காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்எல்ஏக்களில் சிலர் கூட பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள். தேவைப்படும் போது சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம்.
எடியூரப்பாவுக்கு போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. எடியூரப்பா தனது கடிதத்தில் ஆதரவு எம்எல்ஏக்கள் குறித்த பட்டியலை குறிப்பிடவில்லை.
ஆட்சியமைக்க யாரை அழைக்க வேண்டும் என்பது ஆளுநரின் தனிப்பட்ட உரிமை என வாதாடினார்.
காங்கிரஸ், மஜத பெருமாபன்மை இருக்ககிறது என்று கூறிய நிலையில் பாரதீய ஜனதாவை மட்டும் ஆட்சி அமைக்க அழைத்தது ஏன் என சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிக்ரி கேள்வி எழுப்பினார். 104 இடங்கள் வென்ற எடியூரப்பா எதன் அடிப்படையில் ஆளுனரால் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க யாரை முதலில் அழைப்பது என்பதுதான் கேள்வி.
கர்நாடக பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடலாமா? பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா? என நீதிபதி சிக்ரி கேள்வி எழுப்பினார்.
கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநரின் முடிவை ஆய்வு செய்வது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு என 2 வழிகள் தான் உள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பே சிறந்த முடிவாகும் என நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களுக்கே முதல் வாய்ப்பு வழங்க வேண்டும். நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார். நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். கால தாமதமின்றி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். எம்.எல்.ஏக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பாக வாதிடப்பட்டது.
அனைத்து எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வந்து வாக்களிக்க பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நாளை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கூடாது. குமாரசாமி அளித்த கையெழுத்துகள் குறித்து எங்களுக்கு கேள்விகள் உள்ளது என பாஜக வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி கூறினார்.
நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மேலும் தகுந்த பாதுகாப்பு வழங்க கர்நாடக டிஜிபிக்கு உத்தரவிட்டு உள்ளது.
Related Tags :
Next Story