பெங்களூர்-தூத்துக்குடி புதிய விமான சேவை தொடங்கியது


பெங்களூர்-தூத்துக்குடி புதிய விமான சேவை தொடங்கியது
x
தினத்தந்தி 1 July 2018 11:47 AM GMT (Updated: 1 July 2018 11:47 AM GMT)

பெங்களூர்-தூத்துக்குடி இடையே புதிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியில் விமான நிலையம் இயங்கி வருகிறது. இதில் விமானப் போக்குவரத்து சேவை அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தொழில் நகரமான தூத்துக்குடிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.

இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான நிலம் மாவட்ட நிர்வாகம் மூலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. விரைவில் விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளன.

அதே நேரத்தில் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் முனையமும் இங்கு அமைக்கப்படுகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தனியார் நிறுவனம் சார்பில் தினமும் காலை, மாலை என இரு முறை விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.  ஜூலை 28-ந்தேதி மற்றொரு தனியார் நிறுவனம் தூத்துக்குடி-சென்னை இடையே தினமும் புதிதாக 3 விமான சேவைகளை தொடங்க உள்ளது.

இந்த நிலையில், பெங்களுருவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவை தொடங்கி உள்ளது.  பெங்களுருவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பெங்களுருவில் இருந்து தூத்துக்குடிக்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமையை தவிர்த்து பிற நாட்களில் நேரடி விமான சேவை வழங்கப்பட உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பெங்களுருவில் புறப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம் 3.15க்கு தூத்துக்குடி வந்தடையும். 

தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5.15 மணிக்கு பெங்களூரு போய் சேரும்.

ஜூலை 28 முதல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 3 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று தூத்துக்குடி விமானநிலைய இயக்குநர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Next Story