கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராயர் பிராங்கோ மூலக்கல் போப் ஆண்டவருக்கு கடிதம்


கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான  பேராயர் பிராங்கோ மூலக்கல் போப் ஆண்டவருக்கு கடிதம்
x
தினத்தந்தி 17 Sep 2018 5:46 AM GMT (Updated: 17 Sep 2018 5:46 AM GMT)

கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராயர் பிராங்கோ மூலக்கல் போப் ஆண்டவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கொச்சி

கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். கேரளாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை, வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு 19-ந் தேதி (புதன்கிழமை) ஆஜராகுமாறு பேராயர் பிராங்கோவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். எனவே ஜலந்தர் மறைமாவட்ட நிர்வாக பொறுப்புகள் தொடர்பாக பேராயர் பிராங்கோ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக மறைமாவட்டத்துக்கு உட்பட்ட தேவாலயங்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஜலந்தர் மறைமாவட்டத்தில் நான் இல்லாதபொழுது மறைமாவட்டத்தின் நிர்வாகத்தை மூத்த பாதிரியார் மேத்யூ கொக்கண்டம் கவனித்துக்கொள்வார்’ என கூறப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி சமீபத்தில், போப் ஆண்டவருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் தற்போது பாலியல் புகாருக்கு உள்ளான  பேராயர் பிராங்கோ மூலக்கல்லும்  போப் ஆண்டவருக்கு கடிதம் எழுதி உள்ளார். பிராங்கோ மூலக்கல் எழுதி உள்ள கடிதத்தில், தற்காலிகமாக எனது மறைமாவட்ட பொறுப்புகளில் இருந்து விலக விரும்புகிறேன். இதற்காக தங்களின் அனுமதியை கோருகிறேன். என் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் நான் போராட நீண்ட காலம் தேவைப்படும். இதற்காக நான் கேரளா செல்ல உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

தனது பொறுப்புக்களில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை போப் ஆண்டவருக்கான பிரதிநிதியிடம் அவர் ஒப்படைத்துள்ளார். போப் ஆண்டவரிடம் இருந்து முறையாக அனுமதி வந்த பிறகு மூலக்கல் தனது பொறுப்புக்களில் இருந்து விலகுவார் என ஜலந்தர் மறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story