மும்பை–ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்கு ஐகோர்ட்டில் 1,000 விவசாயிகள் எதிர்ப்பு


மும்பை–ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்கு ஐகோர்ட்டில் 1,000 விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 18 Sep 2018 3:48 PM GMT (Updated: 18 Sep 2018 3:48 PM GMT)

மும்பை - ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தினால் விளைவுகளை எதிர்க்கொள்ளும் 1000 விவசாயிகள் ஐகோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.


ஆமதாபாத்,


மும்பை-ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே 500 கி.மீ. தூரத்திற்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் அதிவேக புல்லட் ரெயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு மராட்டியத்தில் கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய அதிவேக ரெயில்வே துறை சார்பில் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இருப்பினும் கிராமங்கள் வழியாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு சப்போட்டா, மாம்பழம் விளையவைக்கும் விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களில் விவசாய நிலங்கள் இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படுகிறது. நிலத்தை கையகப்படுத்தும் விவகாரத்தில் இழுபறி நீடிப்பதால் திட்டத்தை ஏற்கனவே திட்டமிட்டப்படி முன்னெடுப்பது சவாலானது என்றே தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் புல்லட் ரெயில் பாதை செல்லும் வழியில் உள்ள விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்த திட்டத்துக்கு நிலம் எடுப்பதற்கு எதிராக குஜராத் ஐகோர்ட்டில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதற்கிடையே, புல்லட் ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1,000 விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

 இந்த திட்டத்துக்காக நிலம் எடுப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை துரிதமாக விசாரித்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கேட்பதால், வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் உள்ளன. இத்திட்டத்தின் ஜப்பான் இணைந்ததும் குஜராத் மாநில அரசு நில கையகப்படுத்தும் சட்டம் 2013-ஐ நீர்த்துப்போக செய்துள்ளது என்றும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. 

திட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கான சமூக தாக்க மதிப்பீட்டை அரசாங்கம் விவாதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள் தரப்பு வக்கீல் ஆனந்த் யாக்னிக் பேசுகையில்‘‘பதில் மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கேட்பதால் கடந்த 5 வாரங்களாக இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரிக்க முடியவில்லை. எனவே ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த 1,000 விவசாயிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டை நாடி, இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக்கோருவோம். மேலும் நாளை இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முறையிடுவோம்’’ என்று கூறினார்.


Next Story