“போபர்ஸ் ஊழலை மிஞ்சியது ரபேல் போர் விமான ஊழல்” சிவசேனா கடும் தாக்கு

“போபர்ஸ் ஊழலை மிஞ்சியது ரபேல் போர் விமான ஊழல்” என சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
மும்பை,
ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில், சிவசேனாவும் அவ்வரிசையில் இறங்கியுள்ளது. பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, “போபர்ஸ் ஊழலை மிஞ்சியது ரபேல் போர் விமான ஊழல்” என விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் தவிர்த்து எதிர்க்கட்சிகளில் இருக்கும் கட்சிகள் இதுதொடர்பாக ஸ்திரமான வலியுறுத்தலை இதுவரையில் முன்வைக்கவில்லை. இந்நிலையில் இருந்து சிவசேனாவிடம் இருந்து இதுபோன்ற தாக்குதல் முன்வந்துள்ளது.
சிவசேனா கட்சி பத்திரிக்கையான சாம்னாவில், அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் விரிவாக எழுதியுள்ள கட்டுரையில், போபர்ஸ் ஊழலை மிஞ்சியது ரபேல் போர் விமான ஊழல். இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து பேசுவதால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவருக்கு ஆதரவாக பேசினார் என்பதற்காக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹலாண்டேவையும் தேசத் துரோகி என்று பாஜகவினர் கூறுவார்களா? அம்பானிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்பது கிடையாது.
காங்கிரஸ் ஆட்சியின் போது விமானம் ஒன்றுக்கு ரூ.527 கோடிக்கு ஒப்பந்தம் முடிவானது, ஆனால் பா.ஜனதா அரசு ரூ.1,570 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. அப்படியென்றால் இதில் இடைத்தரகருக்கு ரூ.1000 கோடியா?. ரபேல் விவகாரத்தில் கடுமையாக விமர்சனம் செய்தமைக்காக ராகுல் காந்தியின் பின்புலத்தில் பாகிஸ்தான் உள்ளது என்று பா.ஜனதாவின் குற்றச்சாட்டு மிகவும் நகைப்புக்குரியது. 1980-களில் போபர்ஸ் ஊழல் நடந்தபோதும் காங்கிரஸ் கட்சி மீது இதுபோன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், அது பாகிஸ்தானுக்கு உதவவில்லையே. போபர்ஸ் ஊழல் என்றவர்கள் இன்று ஆட்சியில் உள்ளார்கள்.
அவர்கள் ரபேல் ஒப்பந்தத்தை ஊழல் என்று நம்பதயாராக இல்லை. ரபேல் ஒப்பந்தம் விவகாரம் தொடர்பாக மற்ற கட்சிகள் மவுனம் சாதிக்கையில், ராகுல் காந்திதான் குரல் கொடுத்து வருகிறார். அதனால் அவர் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறார். ரபேல் விவகாரத்தில் மக்களை திசைதிருப்பும் முயற்சியாக, அயோத்தி ராமர் கோயில் விவகாரம், இந்து முஸ்லிம் விவகாரத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. ரபேல் விவகாரத்தில் ஒரு பொய்யை மறைக்க 100 பொய்களை கூறுகிறார்கள். பாதுகாப்பு விவகாரங்களில் எதையும் மறைக்கமுடியாது, அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்துவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






