இனி அலகாபாத் நகரத்தின் பெயர் “பிரயாக்ராஜ்” - உத்தரபிரதேச அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு


இனி அலகாபாத் நகரத்தின் பெயர் “பிரயாக்ராஜ்” - உத்தரபிரதேச அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2018 5:45 PM GMT (Updated: 16 Oct 2018 5:30 PM GMT)

அலகாபாத் நகரம் இனி பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படும் என உத்தரபிரதேச அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் பெயரை வரலாற்று காலத்தில் இருந்ததுபோல் பிரயாக்ராஜ் என மாற்றவேண்டும் என்று மடாதிபதிகள், சாமியார்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அடுத்த ஆண்டின்(2019) தொடக்கத்தில் இந்த நகரில் கும்பமேளா நடைபெற இருப்பதால் இக்கோரிக்கை மேலும் வலுவடைந்தது.

இதை ஏற்றுக்கொள்வதாக பா.ஜனதா முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் தலைமையில் மாநில மந்திரி சபை கூட்டம் இன்று லக்னோ நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் அலகாபாத் நகருக்கு பிரயாக்ராஜ் என்று மறு பெயர் சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு பின்பு இதுபற்றி மந்திரி சித்தார்த்த நாத் சிங் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கும்பமேளா நடைபெறுவதற்கு முன்பாகவே அலகாபாத் நகருக்கு பிரயாக்ராஜ் என மறுபெயர் சூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இனி அலகாபாத் நகரம் பிரயாக்ராஜ் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும். ரிக்வேதம், மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றில் பிரயாக்ராஜ் நகரம் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. ரெயில்வே இலாகா உள்ளிட்ட அனைத்து துறைகளின் பதிவேடுகளிலும் அலகாபாத்தை பிரயாக்ராஜ் என்று மாற்றம் செய்யவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். எதிர்க்கட்சிகள் இதை அரசியலுக்காக விமர்சிக்கின்றன. ஆனால் நாங்கள் நகரின் இழந்த வரலாற்றுப் பெருமையை மீட்டு இருக்கிறோம்’’ என்று குறிப்பிட்டார்.


Next Story