தண்டவாளம் அருகே மக்கள் கூட்டத்தை கண்டால் வேகத்தை குறையுங்கள்: ஓட்டுநர்களுக்கு ரயில்வே அறிவுறுத்தல்


தண்டவாளம் அருகே மக்கள் கூட்டத்தை கண்டால் வேகத்தை குறையுங்கள்: ஓட்டுநர்களுக்கு ரயில்வே அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 25 Oct 2018 1:20 AM GMT (Updated: 25 Oct 2018 1:20 AM GMT)

தண்டவாளம் அருகே மக்கள் கூட்டத்தை கண்டால் ரயில் வேகத்தை குறைக்க வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த 19-ம் தசரா பண்டிகை கோலகலமாக நடைபெற்றது. அப்போது, ரயில்வே பாதையில் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மீது வேகமாக வந்த ரயில் ஏறியதில் 61 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

அமிர்தசரஸ் போன்று மற்றொரு துயர சம்பவம் நடைபெறாமல் தடுப்பதற்காக வடக்கு ரயில்வே சில உத்தரவுகளை ரயில் ஓட்டுனர்களுக்கு பிறப்பித்துள்ளது. அதன்படி, கூட்டத்தை கண்டால் ரயில் வேகத்தை குறைத்து ஓட்ட வேண்டும். குறிப்பாக பண்டிகை காலங்களில் மிகுந்த கவனத்துடன் ரயிலை இயக்க வேண்டும்.

மக்கள் கூட்டத்தை தண்டவாளத்தின் அருகே பார்க்கும்போது அதுகுறித்த தகவல்களை அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு தெரிவித்து விட வேண்டும். பண்டிகை சமயங்களில் அடிக்கடி விசில் அடித்து ரயிலை இயக்க வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.இதேபோன்று, ரயில்வே பாதைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய உத்தரவை வடக்கு ரயில்வே நிர்வாகம் பிறப்பித்துள்ளது. 

Next Story