நடிகை சுருதி பாலியல் தொல்லை புகார்: நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


நடிகை சுருதி பாலியல் தொல்லை புகார்: நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Nov 2018 10:00 PM GMT (Updated: 2 Nov 2018 9:23 PM GMT)

நடிகை சுருதி அளித்துள்ள பாலியல் தொல்லை புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

நடிகர் அர்ஜூன் ‘நிபுணன்’ என்ற படத்தில் நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். இந்த படம் கன்னடத்தில் ‘விஸ்மய’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நடித்தபோது, அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டினார். இதை அர்ஜூன் முற்றிலுமாக மறுத்தார்.

சுருதி ஹரிகரன் மீது பெங்களூரு கோர்ட்டில் அர்ஜூன் ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் கப்பன்பார்க் போலீசில் நடிகை சுருதி ஹரிகரன், அர்ஜூன் மீது பாலியல் தொல்லை புகார் அளித்தார். அதன்பேரில் நடிகர் அர்ஜூன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தன் மீது போடப்பட்டுள்ள பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நடிகர் அர்ஜூன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு ஐகோர்ட்டில் நீதிபதி தினேஷ்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அர்ஜூன் சார்பில் மூத்த வக்கீல் பி.வி.ஆச்சார்யா ஆஜரானார்.

அவர் வாதிடுகையில், ‘திரைத்துறையில் 37 ஆண்டுகளாக நடித்துவரும் அர்ஜூனுக்கு நற்பெயர், புகழ் உள்ளது. ஆனால் சுருதி ஹரிகரன் படத்தில் நடித்த காட்சிகளை கொண்டு, அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று புகார் கூறி இருக்கிறார். இதனால் அர்ஜூனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மீது பொய்யான புகாரின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அர்ஜூனை கைது செய்யக்கூடாது என்றும், அதே நேரத்தில் போலீசாரின் விசாரணைக்கு தடை இல்லை என்றும் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்தநிலையில் அர்ஜூன் தொடர்ந்த மானநஷ்ட வழக்கு விசாரணை நேற்று பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை வருகிற 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story