கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிரம் - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க நடந்த குதிரைபேர உரையாடல்


கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா தீவிரம் - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க நடந்த குதிரைபேர உரையாடல்
x
தினத்தந்தி 3 Dec 2018 9:45 PM GMT (Updated: 3 Dec 2018 8:53 PM GMT)

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா நடத்திய குதிரைபேர உரையாடல் பதிவை உளவுத்துறை முதல்-மந்திரி குமாரசாமியிடம் ஒப்படைத்தது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, புதிய ஆட்சி அமைக்க பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக பா.ஜனதா குதிரைபேரத்தில் ஈடுபட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள சதீஸ் ஜார்கிகோளி உள்பட 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு வந்தால் கட்சி செலவில் மீண்டும் எம்.எல்.ஏ. ஆக்கி மந்திரி பதவி வழங்குவதாகவும், அதுமட்டுமின்றி தலா ரூ.25 கோடி கொடுப்பதாகவும் ஆசை காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பேரம் பேசியது தொடர் பான ஆடியோ பதிவை முதல்- மந்திரி குமாரசாமியிடம் உளவுத்துறை போலீசார் வழங்கியுள்ளனர். இந்த குதிரைபேர விஷயத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களிடம் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும் கட்சி தாவுவதை தடுக்கும் வகையில் எம்.எல்.ஏ.க் களை கண்காணிக்குமாறு குமாரசாமி காங்கிரஸ் கட்சியை கேட்டுக்கொண்டுள்ளார்.

பா.ஜனதாவை சேர்ந்த ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.வின் உதவியாளர் துபாயில் உள்ள ஒரு தொழில் அதிபரிடம் இந்த பேரம் குறித்து பேசி இருக்கிறார். கர்நாடக சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கர்நாடக மந்திரி சபையில் 7 மந்திரி பதவி இடங்கள் காலியாக உள்ளன. அந்த மந்திரி பதவிகளை நிரப்ப காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி தீவிரம் காட்டிவந்தது. தற்போதைய சூழ்நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் செய்தால், மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவுக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் மந்திரிசபை விரிவாக்கத்தை தள்ளிவைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி சதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. கூறுகையில், ‘நான் காங்கிரசைவிட்டு விலகமாட்டேன். இதுபற்றி வெளியான தகவல்கள் தவறானவை. மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதால் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதை தள்ளிவைப்பது ஏன்? என்று எனக்கு தெரியவில்லை’ என்றார்.

பி.சி.பட்டீல் எம்.எல்.ஏ., ‘மந்திரி பதவியை எதிர்நோக்கி உள்ளேன். பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரசிலேயே இருந்து பதவியை பெறுவேன். வேறு கட்சிக்கு செல்லமாட்டேன்’ என்றார்.

இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story