கணினிகளை கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்தற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு


கணினிகளை கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்தற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு
x
தினத்தந்தி 24 Dec 2018 7:24 AM GMT (Updated: 24 Dec 2018 10:53 AM GMT)

கணினிகளை கண்காணிக்க 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்தற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் உள்ள எந்தவொரு கம்ப்யூட்டர் தரவுகளையும் (டேட்டா) குறுக்கிடவும், கண்காணிக்கவும், கண்டறியவும், வேவு பார்க்கவும் 10 மத்திய அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு சமீபத்தில் அதிரடி உத்தரவு  பிறப்பித்தது.

இது குறித்த ‘கெசட்’ அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.  இந்த ‘கெசட்’ அறிவிப்பின்படி, 

1. உளவு அமைப்பு (ஐ.பி.) 2. போதைப்பொருள் தடுப்பு அமைப்பு 3. அமலாக்க இயக்குனரகம் 4. மத்திய நேரடி வரிகள் வாரியம். 5. வருவாய் புலனாய்வு இயக்குனரகம் 6. சி.பி.ஐ. 7.தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) 8. மத்திய மந்திரிசபை செயலகத்தின் கீழ் செயல்படும் ‘ரா’ உளவுப்பிரிவு ( ‘ரா’ என்னும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு) 9. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், அசாமில் செயல்படுகிற சமிக்ஞை புலனாய்வு அமைப்பு 10. டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகிய 10 அமைப்புகளும் எந்த கணினியையும் கண்காணிக்க வழி வகை செய்யப்பட்டது. 

கம்ப்யூட்டர்களை உளவு பார்க்க 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு இப்போது அதிகாரம் வழங்கி பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எல்.எல்.சர்மா என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Next Story