காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் ராகுல்காந்தி - தம்பிதுரை குற்றச்சாட்டு


காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் ராகுல்காந்தி - தம்பிதுரை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Jan 2019 10:00 PM GMT (Updated: 2 Jan 2019 8:13 PM GMT)

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ராகுல்காந்தி துரோகம் செய்ததாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டினார்.

புதுடெல்லி,

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்த தமிழக எம்.பி.க்கள் 24 பேரை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது தம்பிதுரை கூறியதாவது:-

மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறிய செயல் ஆகும். இதை எதிர்த்து தமிழக மக்கள் குரல் கொடுத்தார்கள். அவர்களின் உணர்வை புரிந்துகொண்டு நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் கொடுத்தோம்.

போராட்டம் என்று வரும்போது இதுமாதிரி சில தண்டனைகள் வரும். அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்காக பயப்படவில்லை. இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி சபாநாயகரிடம் கோரிக்கை வைப்போம்.

மேகதாது தொடர்பான விவாதத்துக்கு நாங்கள் தயார்தான், அதே நேரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு ரத்து ஆகுமா? என்று மத்திய மந்திரியிடம் கேட்டோம். ஆனால் முடியாது என்று மந்திரி சொல்லி விட்டார். பிறகு என்ன செய்வது?

மேகதாது விவகாரத்தை பொறுத்தவரை பா.ஜனதாவும், காங்கிரசும் நினைத்தால்தான் தீர்வு காண முடியும். அந்த 2 கட்சிகளும் இதை அரசியலாக பார்க்கின்றன.

இந்த விஷயத்தில் தி.மு.க.வுடன் இணைந்து நாங்கள் போராட தயார். அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு ஒரு கேள்வி வைக்கிறேன். அவர்கள் ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தியிடம் சென்று, கர்நாடக அரசு தயாரிக்கும் மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்துவார்களா? அதை செய்தால் எங்களோடு சேர்ந்து போராடலாம்.

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நாங்கள் தயார். ஆனால் அதற்கான எம்.பி.க்கள் எண்ணிக்கை அ.தி.மு.க.வுக்கு இல்லை என்று தம்பிதுரை கூறினார்.

பேட்டியின் போது, ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற விவாதத்தை தடுக்க பா.ஜனதாவுக்கு பின்னணியாக அ.தி.மு.க. செயல்படுகிறது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருப்பது பற்றி தம்பிதுரையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ராகுல்காந்தி இளம் அரசியல்வாதி. அவர் இன்னும் முழுமையாக அரசியலை புரிந்து கொள்ளவில்லை. காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் ராகுல்காந்தி. கர்நாடகத்தை காப்பாற்றுவதற்காகத்தான் அவர் ரபேல் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். மேகதாது பிரச்சினையை மறைக்கத்தான் எங்களை மவுனியாக்கி நாடகம் ஆடினார்” என்று குற்றம்சாட்டினார்.


Next Story